Monday, January 14, 2013

இலக்கிய ஓவியம்: புலிக்குகை

மாலை முரசு பொங்கல் மலரில் 13-01-2013 வெளிவந்த இலக்கிய ஓவியம்:
   புலிக்குகை.              000000      

                                                                                                                                                       - முனைவர். பா. இறையரசன்.                                                                                                                                                                            

            பக்கத்து வீட்டுப் பெண்,  மான்போல் துள்ளிக் குதித்து அடுத்த வீட்டுக்கு முன் வந்ததும் தயங்கி நின்றாள். பின் மெல்ல நடந்து அவ்வீட்டுக்கு வெளியே வாசலில் நின்று முன் கூரையைத் தாங்கிக் கொண்டிருந்த சிறுதூணைப் பற்றிக் கொண்டு எட்டிப் பார்த்தாள்.  எங்கே அவன்?’  அவள் புருவங்களில் வினாக்குறி வில்லாய் வளைந்து கரு விழிகள் அம்பு போல் வீட்டின் உள்ளே பாய்ந்தன. அவன் இருக்கிறானா? இல்லையா?  உள்ளே இருப்பானா?.
          அவன் தோளைப் பார்த்தால்  பார்த்துக்  கொண்டே  இருக்கலாம். மலை போன்ற தோள்கள். இந்தத் தோளிலிருந்து அந்தத் தோள்வரை பார்க்கவே பல உகங்கள் ஆகிவிடும். வீரம் செறிந்த அவன் தோள்களைப் பார்த்ததுமே அவள் கண்கள், சூரியன் மேற்கே மறைந்ததும்  தலை சாயும் தாமரைகள் போல்  தரையைப் பார்க்கும். மெல்ல மெல்ல அவன் கால்களையும் கால்களில் உள்ள வீரக் கழல்களையும் பார்த்துப் பெருமிதம் கொண்டு மகிழும். மலைகளுக்கு மேலே  தோன்றுகின்ற  காலைச் சூரியன்போன்ற அவன் முகத்தைப் பார்க்க அவளுக்குத் துணிச்சல் இல்லை.
          துணிந்து ஒருமுறை அவன் முகத்தைப் பார்த்துவிட்டு விருட்டெனத் தாழ்ந்தன  அவள் விழிகள். ஆ! மின்னல் பாய்ந்ததா? மீசைக்கு மேலே நெருப்பைக் கக்கும் அந்த விழிகள் போர்க்களத்தில் மட்டுமல்லவா சிவக்க வேண்டும்! இந்த ஆண் மகனுக்கு ஒருப் பெண்ணைக் குளிர்ந்த விழிகளால் பார்க்கத் தெரிய வில்லை போலும்!
        வீட்டுக்குள்ளே  பார்த்தாள்.  அவன் இல்லை! எங்கே போயிருப்பான்? விளையாட்டுப் பெண். மெல்லத் தூணைப் பற்றிக் கொண்டு வீட்டுக்குள்  எட்டிப் பார்த்தாள். அந்த வீரனின் தாய்தான் வீட்டினுள் இருந்தாள். உறுதியான உடலும் வீரம் செறிந்த உள்ளமும் கொண்ட அந்த காவற்பெண்டின்  தோற்றம் கற்பின் கனலி கண்ணகியைப்போல் இருந்தது. அவன் எங்கே?.
தாயே! அவன் எங்கே?.........உம்…..உன்  பிள்ளையைத்தான் கேட்கிறேன்……  எங்கே?..... எங்கே போனான்? என்  கண்ணில் படவில்லையே!’’
வீரத்தாய் பார்த்தாள் வெளியே…… அந்தப்பெண் ! சிறிய குடிலின் தாழ்ந்த  இறைவாணத்தைத்  தாங்கிக்கொண்டு  நிற்கும்  தூணின் பின்னாலே இருந்து அவள் முகம் முழுமதியாய் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.  வெள்ளையுள்ளம் கொண்ட அந்தச் சிறு பெண்ணின் கள்ளமில்லாச் சிரிப்பில் ஆழ்ந்த அந்தத் தாய்   புன்சிரிப்புடன்  அவளைப் பார்த்தாள்.
          “ ஏனடி  பெண்ணே! எதற்குக் கேட்கிறாய்?  ஊர்ப் பெண்களோடுதான் சண்டை போடுவாய்.  இப்போது அவனோடு சண்டை போடவா? அவன்  இருந்தால்தான் நீ வரமாட்டாயே!’’  
             “உம்…..அவன் ஆண்களோடுதான் நட்பு கொண்டிருப்பான் ;     ஆண்களோடுதான்  சண்டை போடுவான். அவனை  எப்போது  நான்
           சண்டைக்கு இழுத்தேன்.  உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். அவன் எங்கே?
           அதைச் சொல் !’’.
             “கள்ளி! அவன் எங்கே போயிருக்கிறானோ, அது எனக்குத் தெரியாது ! புலி உறங்கிய குகை போன்ற என் வயிறு  இங்கே இருக்கிறது. அவன் இருக்குமிடம் எனக்குத் தெரியாது! ஆனால் உறுதியாகச் சொல்வேன், அவன் இருக்குமிடம் ஓர் போர்க் களமாகத்தான் இருக்கும்.  அங்கே அவன் வீரதோடு வாளேந்தித் தோன்றுவான்!’’.
அவன் வீரத்தையும் பெருமிதத்தையும் கொண்ட உருவத்தைக் கண்ணுள் கண்ட அந்த இளம் பெண்ணின் முகம் சிவந்து, மனம்  காளையின் கட்டழகை நினைந்து மயங்கியது. தாயின் மனமோ மகனின் வீரத்தை எண்ணிப் பொங்கியது.
இதோ…. இந்தக் காட்சியைக் காட்டும் காவற்பெண்டின் புறநானூற்றுப் பாடல்……….....
                 “சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
                 யாண்டுளனோஎன வினவுதி; என்மகன்
                  யாண்டுளன் ஆயினும் அறியேன்; ஓரும்
                  புலிசேர்ந்து போகிய கல்லளை போல
                  ஈன்ற வயிறோ இதுவே!
                  தோன்றுவன்  மாதோ  போர்க்களத்  தானே!’’. 
                                                                                           -                                                                      காவற்பெண்டு  (புறநானூறு-86).
இவ்விளக்கத்தைக் காணொளியாகக் காண:
http://www.facebook.com/tamilargal/app_162891010412392

5 comments:

  1. மிகப்பலவாக விளக்கப்பட்ட பாடல். எனினும் படித்தவற்றுள் அருமை இதுவே. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    ReplyDelete
  2. "அடிபட்டு, மிதி வாங்கி, கேவலப்பட்டு, கேட்பாரற்ற, நாதியற்ற கூட்டமோ ? வீரம் விலைபோய்
    விட்டதோ இங்கே ? " என்று அந்த புறநானூற்றுத் தாய் நம் மீது காறி உமிழ்வது போல தீரா மன வலியுடன் உணரவைக்கிறது.
    பணி தொடரட்டும்! எப்படி இருந்த நாம் இப்படியாகிப்போனோமே என்றாவது நாம் அனைவரும் நினைத்தாவது பார்ப்போமா ?

    ReplyDelete
  3. மிக்க நன்றி ஐயா... வகுப்பறையில் பாடம் படித்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன...

    எழுத்துருவின் நிறமும் பிண்ணனியும் படிப்பதற்கு சிரமத்தையளிக்கின்றது.

    படம் அருமை... புலிக்குகை இருப்பிடம் குறித்த தகவல்கள் இணைப்பின் நலம் பயக்கும்...

    நன்றி ஐயா

    உங்கள் மாணவன்
    தா.சகாயராசு

    ReplyDelete
  4. தமிழீழ விடுதலைக் களத்திலிருந்து கடமையாற்றுகின்ற விடுதலை வீரனின் வீட்டிற்குள் (குகைக்குள்) சென்று திரும்பிய உணர்வைக் கொடுத்ததய்யா உம் புலிக்குகை.கழக இலக்கியச் செல்வங்களைத் தமிழர்தம் இல்லங்கள் தோறும் செலுத்திச் சேர்த்தலென்பது,இக்காலச் சூழலில், தமிழின் வளர்ச்சிக்கும், தமிழரின் விடுதலைக்கும் செய்கின்ற அருந்தொண்டு. இக்கட்டுரை வாயிலாக இத்தகு அறப்பணியில் ஈடுபட்டுள்ள தாங்கள், வாழ்க பல்லாண்டு!!-செந்தமிழ்பாலா

    ReplyDelete
  5. GREAT SERVICE! BEST WISHES FROM NORWAY! PLEASE DO YOUR BEST & CONTINUE YOUR GREAT SERVICE!!

    ReplyDelete

தங்கள் கருதுக்களை இன்கே பதியுங்கள்:

திரட்டி

Thiratti.com Tamil Blog Aggregator

Followers